tamilnadu

img

நம்பிக்கைக் கீற்றாய் அமைந்த உரையாடல்! -ம.பாலசுப்பிரமணியன்

சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னர் கைரேகைச் சட்ட அடக்கு முறைக்கு எதிராக ஆவேசமாய் கலகக்குரல் உயர்த்திய மண் பெருங்காமநல்லூர். வீறு கொண்டு எழுந்த அம்மக்களின் போராட்டம் இறுதியில் பிரிட்டிஷ் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 16 பேரின் மரண ஓலத்தோடு முடிந்தது! வர லாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியது பெருங்காமநல்லூர் மக்களின் தியாகம். அத் தியாகிகளின் நினைவிடத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டு முழக்கமான ‘சாதியம் தகர்ப்போம் - மனிதம் வளர்ப்போம்’ என்ற பதாகையுடன் சாதிக்கு எதிரான உரையாட லைத் துவக்குவது என தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்தது. பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு அஞ்சலி... அதுவும் தீண்டாமை ஒழிப்பு முன் னணியா...?! இது பலருக்கும் மனதில் எழுந்த கேள்வி. சாதி ஒழிப்புக்கு உழைக்கும் வர்க்க மக்க ளின் ஒற்றுமை அவசியம் எனும் பொழுது, பட்டி யல் சாதி அல்லாத மக்களிடம் உரையாடும் நிகழ்வை ஒடுக்குமுறைக்கு எதிராக கலகக்குரல் உயர்த்திய உழைக்கும் வர்க்கத்தினரான பெருங்காமநல்லூர் தியாகிகளின் நினைவிடத் தில் துவங்கியது மிகவும் பொருத்தமானதே என்பதை, அடுத்தடுத்த நாட்களில் மதுரை மாவட்டம் முழுவதும் பலரிடம் நடந்த உரை யாடல் உறுதிப்படுத்தியது.

ஜூலை 23 அன்று பெருங்காமநல்லூரில் துவங்கிய அந்த உரையாடல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டின் நோக்கங்கள் குறித்து விளக்குவதாகவும் இந்த உரையாடல் அமைந்தது.  “சாதிப் பாகுபாடு... தீண்டாமையைக் கடைப் பிடிப்பது சரிதானா? நீங்கள் என்ன நினைக்கி றீர்கள்?”  “அதெல்லாம் அநியாயம்ப்பா... அதனால் நமக்கு என்ன அள்ளிகட்டிக்கிட்டு வரப்போகுது? நம்ம உழைச்சா தான் கஞ்சி குடிக்க முடியும்.  வேலை இல்லாம கஷ்டப்படுறியே... கஞ்சி குடிக்கிறதுக்கு என்ன பண்றன்னு யாரு வந்து கேக்கப்போறா...? சாதிப் பெருமய பேசிக்கிட்டு திரிஞ்சா வயிறு நெறஞ்சுருமா...?”  - சாதியைவிட வாழ்க்கைப் பாடு தான் பெரிது என வாழ்க்கை அனுபவம் வார்த்தைகளாக வந்து கொட்டியது. வள்ளி என்ற பெண்மணியும் மற்ற பலரும் கருமாத்தூரில் இப்படித்தான் நமது மாநாட்டை வாழ்த்தினார்கள். சிங்கம்பட்டியைச் சேர்ந்த ஒரு மீன் வியாபாரி யிடம் பேசினோம். மந்தையின் மரத்தடியை சுற்றி எழுப்பப்பட்டிருந்த அகன்ற திண்ணையில் அமர்ந்தபடியே குழுவினரையும் அமரச் சொல்லிவிட்டு பேசத்துவங்கினார் அவர்: “அட எதுக்குப்பா சாதி? மீன்பிடிக்கிறவெ ஒரு சாதி... கருவாடு ஆக்குறது ஒரு சாதி... விக்கிறவெ ஒரு சாதி... சாப்பிடுறது எல்லா சாதியுந்தா..! இதுல ஒரு சாதிய விட்டுட்டு இன்னொரு சாதி மட்டும் வாழ்ந்துற முடியுமா? நமக்கெல்லாம் இந்த சாதி பாக்குறது இதெல் லாம் புடிக்காதப்பா... நமக்கு எல்லோருந்தா வேணும்...”

மீன் வியாபாரத்தின் வழியே சமூக வாழ்க்கை என்பது கூட்டு உழைப்பினால் ஜீவித்துக் கொண்டி ருக்கிறது என்கிற தத்துவத்தை வெகு அநாயச மாக சொன்னார்.  இவரது பேச்சு ஒட்டுமொத்த குழுவினருக்கும் உற்சாகத்தைத் தந்தது; இன்னும் பல பேரை சந்தித்து உரையாட வேண்டும் என்ற உந்து தலையும் உண்டாக்கியது! பின்னர் 30 வயதுப் பெண்ணுடன் மாதர் சங்கத் தோழர்கள் உரையாடல்: “அய்யய்யோ... நாங்களெல்லாம் சாதியில இருந்து விடுபடனும்னு நெனக்கிறோம்க்கா... எங்க வீட்டுக்காரருக்கும் அதெல்லாம் புடிக் காது... எங்களோட இந்த சாதி போகட்டும்! எங்க புள்ளைகளுக்கு சாதிப் பெருமையெல்லாம் நாங்க சொல்லிக்கொடுக்கமாட்டோம். அதுக நல்லா படிச்சு வரட்டும்” - மிகவும் அந்நியோன்ய மாக மனம் விட்டுப் பேசி சிரித்துக் கொண்டே விடை பகிர்ந்தார்.  அவரது வார்த்தைகள் சம்பிரதாயத்திற்காக சொல்லப்பட்டவை அல்ல... சத்திய வார்த்தை களைப் போல இருந்ததை பதில் சொல்லும் விதத்திலே நம்மால் உணர முடிந்தது. அடுத்து இரண்டு நடுத்தர வயது பெண்மணி கள். மாட்டுக் கொட்டகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

“நமக்கு கீழ இருக்கிற தலித்துகளை பார்த்து நாம பாகுபாடு காட்டுறோம். ஆனா நமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு எதிர்பாராதவிதமா விபத்து நடந்து உயிருக்குப் போராடும் போது, ரத்தம் செலுத்த வேண்டி வருது. அந்த நேரத்துல என் ஜாதிக்காரன் ரத்தத்ததான் ஏத்தனும்னு டாக்டர் கிட்ட நாம சொல்லுவோமா? அப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள்ல எத்தனை பேருக்கு யார் யாரு ரத்தம் ஏறி யிருக்கோ! அதுல தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்க ரத்தம் எத்தனை பிற்படுத்தப்பட்ட, உயர்சாதிக் காரர்கள் உடம்புல ஏறியிருக்கும்... அதேபோல மற்ற சாதிக்காரர்கள் ரத்தம் எத்தனை தலித் மக்கள் உயிரக்காப்பாத்தியிருக்கும்” என்று உரையாடலைத் துவக்கினோம்.  அந்தப் பெண்மணிகள் இருவரும் ஆமோ திக்கும் வகையில் தலையசைத்துக் கொண்டே பேசத் துவங்கினார்கள்: “எங்க ஊர்ல நூறு நாள் வேலைத்திட்டத்தில நாங்க, எஸ்.சி. மக்களெல்லாம் ஒன்னதாம் வேலை பாக்குறோம். ஒண்ணுமண்ணாதான் புழங்குறோம். அங்கெல்லாம் நாங்க எந்த பாகுபாடும் பாக்குறதில்ல. எங்க பாடே பெரும்பாடா இருக்கு. இதுல போயி நாங்க கௌரவம் பாத்து என்ன ஆகப்போகுது?” அதே நேரத்தில் நம்மோடு உரையாடி யவர்களில் சாதியை ஆமோதித்துப் பேசிய வர்களும் உண்டு.

ஒரு பெண்மணி சொன்னார்: “எஸ்.சி. மக்கள் கிட்ட சாதிப்பாகுபாடு காட்டக் கூடாது. வேற்றுமையா நடத்தக்கூடாது. நமக்கு ஒரு உதவினா அவுங்களும் அவுங்களுக்கு ஒரு உதவினா நாங்களும் ஒத்தாசை பண்ணிக்கிற ணும். ரத்தம் கொடுக்குறது கூட தப்பில்ல. ஆனா அதுக்காக சாதி விட்டு சாதி கல்யாணமெல்லாம் பண்ணக்கூடாது!” இது சாதிய வன்மத்தோடு வந்து விழுந்த வார்த்தைகள் இல்லை. மாறாக காலம் காலமாக ஊறிப்போன ஒரு வாழ்க்கை முறைக்குப் பழகிப் போனவர்களின் வார்த்தை களாகவே வந்தன.

70 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் உரையாடிய போது... “நான் ஒரு சாதி வெறி பிடிச்சவ தாம்ப்பா! எங்க வீட்ட சுத்தி எஸ்.சி. வீட்டு ஆளுக இருக்கத்தா செய்றாங்க. அவுங்க பக்கம் நான் போகமாட்டேன். அது மாதிரியே அவுங்க யாரையும் ஏ வீட்டுக்குள்ள நுழைய விடமாட்டேன்! ஆனா, எம் புள்ளைக அவுங்க வீட்டுக்கு போறாக... வாராக... அத நா கண்டுக்கிறதில்ல... அது அவுங்க விருப்பம்னு விட்டுட்டேன்...” என்றார்.  தன்னிடம் சாதிய ஆதிக்க உணர்வு ஊறிப் போயிருந்தாலும் தனது சந்ததியிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நடப்பை புரிந்து கொண்டதாக இருந்தது அவரது பேச்சு. 75 வயது மதிக்கத்தக்க முதியவரிடம் பேசி னோம். அவர் அந்த ஊர் தலைவர்களில் ஒருவர் எனத் தெரிய வந்தது. சாதிப்பாகுபாடைப் பற்றி பேச ஆரம்பித்ததுமே இடைமறித்து அவரே மளமளவென்று பேசத்தொடங்கினார்:

“எப்பா... முன்ன மாதிரியெல்லாம் இங்க யாரும் சாதி பாக்குறதில்ல. அவுங்கள (தலித்களை) நாங்க சமமா தான் நடத்துறோம். எது ஒன்னுனாலும் அவங்க கிட்டயும் வரி வாங்குறோம். நல்லது கெட்டதுக்கு கருத்து கேட்கிறோம். ஆனா ஒரு விஷயம்ப்பா... முன்ன நாங்க சொன்னா மறுத்துப் பேசாம வேலை செய்வாங்க... இப்ப கேள்வி கேக்குறாங்க. இப்ப சட்டம், அது இதுனு வந்துருச்சு. அதனால நாங்களும் சகிச்சுக்கிட்டு போயிடறது...” - இது ஊரில் அதிகாரம் செலுத்தும் ஒருவ ரின் வார்த்தைகள். உண்மையைப் போட்டு டைத்த வார்த்தைகள். ஆனால் அதில் வன்மத்தைக் காண முடியவில்லை!

சுமார் 30 பேர் வரை சந்தித்து உரையாடி யிருப்போம். இந்த உரையாடலில் நான்கு அல்லது ஐந்து பேரைத் தவிர மற்ற அனை வரும் சாதிக்கு எதிராகவும், சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராகவுமே கருத்துக் களைத் தெரிவித்தனர். சாதியை ஆதரித்துப் பேசியவர்களும் வன்மத்துடன் பேசவில்லை! இந்த உரையாடல் உண்மையிலேயே சாதி யத்திற்கு எதிரான மனோநிலையை- கருத்தாக் கத்தை தமிழக மக்கள் மத்தியில் உண்டாக்க முடியும் என்பதற்கான உரைகல்லாக அமைந் தது; அது மட்டுமல்ல... சாதியத்திற்கு எதிரான உரையாடலை தலித் அல்லாத இதர சாதியினர் மத்தியில் நிகழ்த்துவது என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு எடுத்த முடிவு சரியானது என்பதையும் உணர்த்துவதாகவும் இருந்தது.  மதுரை வட்டாரத்தின் தலித் அல்லாத இதர சாதியினரிடம் - பொதுமக்களிடம் - உரை யாடலை முடித்துவிட்டு திரும்பும் போது மாமேதை லெனின் கூறிய ஒரு வாசகம் நினைவுக்கு வந்தது: “மக்களிடம் செல்லுங்கள்... கற்றுக் கொடுங் கள்... மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங் கள்...!”

கட்டுரையாளர்: மதுரை மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி